×

வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் தெப்பக்குளத்தில் நந்தி சிலை கண்டெடுப்பு-தூர்வாரும் பணி தொடக்கம்

நாகர்கோவில் :  நாகர்கோவிலில் மிகவும் பழமையான வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் தெப்பக்குளத்தில் இருந்து பழமையான நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் வடசேரி பகுதியில் அமைந்துள்ள மிக பழமையான கோயில் தழுவிய மகாதேவர் கோயில் ஆகும். பழையாற்றின் கரையில் இந்த கோயில் அமைந்துள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயிலுக்கும் முந்தைய கால கட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாக இந்த கோயில் கருதப்படுகிறது. இந்த கோயில் சித்தர்களால் பூஜிக்கப்பட்ட கோயில் எனவும் பெயர் பெற்றதாகும். திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் இந்த கோயிலில் சிறப்பான பூஜைகளும், திருவிழாக்களும் நடந்து வந்தன. தற்போது இந்த கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் குமரி மாவட்ட திருக்கோயில்கள் அலுவலகத்தின் கீழ் வருகிறது.

 கோயிலுக்கு ெபயர் வந்தது குறித்து ஒரு ஐதீகம் உள்ளது. இந்த கோயிலில் பின்புறம் அழகான தெப்பக்குளம் உண்டு. இந்த தெப்பக்குளத்தில் இருந்து தினமும் ஒரு பெண், குவளையில் இருந்து தண்ணீர் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்ய முயன்றார். ஆனால் குவளை உடைந்து தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. தினமும் இவ்வாறு நிகழ்ந்ததால் அந்த பெண் மனமுடைந்து குளத்துக்குள் விழுந்து உயிரை மாய்க்க முயன்றார்.

அவரை மகாதேவர் தழுவி, உயிர் கொடுத்ததால், தழுவிய மகாதேவர் என அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இந்த தெப்பக்குளம் நாளடைவில் பராமரிப்பு இல்லாமல் போனது. இந்த தெப்பக் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதும், பழமையான திருக்கோயில்களில் புனரமைப்பு பணிகள், திருப்பணிகள் செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், 12 வது வார்டு பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது இந்த வார்டு கவுன்சிலர் சுனில் அரசு உள்ளிட்ட பக்தர்கள், கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, தெப்பக்குளம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் உறுதி அளித்தார்.
அதன்படி ₹7 லட்சம் செலவில் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி நடக்கிறது.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெப்பக்குளத்தை தூர்வாரி, கரைகள் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். நேற்றும் இரு ஜேசிபி மூலம் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்போது தெப்பக்குளத்துக்குள் மிகவும் பழமையான நந்தி கற்சிலை கிடந்தது தெரிய வந்தது. அந்த சிலையில் நந்தியின் முகம் மட்டும் சேதம் அடைந்து இருந்தது.

கழுத்தில் மணி கட்டியது போல் மிகவும் அழகாக இந்த சிலை செதுக்கப்பட்டு இருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி மற்றும் அலுவலர்கள் வந்தனர். ஐயப்பா சேவா சமாஜம் மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா, கவுன்சிலர் சுனில் அரசு மற்றும் இந்து அமைப்பினரும் வந்தனர். சிலை பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

உடையாத படித்துறைகள்

இந்த தெப்பக்குளம் பக்தர்கள் நீராடவும் பயன்பட்டுள்ளது. இதற்காக அந்த காலத்தில் படித்துறைகளும் அமைத்துள்ளனர். தற்போது தூர்வாரிய பிறகே படித்துறைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. அழகான தொட்டி போல் மிகப்பெரிய சதுர வடிவில் தெப்பக்குளம் அமைந்திருக்கிறது.


Tags : Statue ,Mahadevar Temple Prefecture ,Vadheri , Nagercoil : The most ancient Vadaseri in Nagercoil is the ancient Nandi idol from Theppakulam Mahadeva Temple.
× RELATED குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர்...